புகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் கதிர்வீச்சு கழிவுநீர் கசிவு..!!
ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் வீரியம் மிக்க கதிர்வீச்சு கழிவுநீர் வெளியேறியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது அங்குள்ள ஃபுகுஷிமா அணுஉலை கடும் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து, இந்த அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அணு உற்பத்தி நடந்து வரும் ரியாக்டர்களை குளிர்விக்க தற்காலிக முகாம்களை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஈடுபட்ட 10 தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதி கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகினர்.
அவர்களின் முகம் மற்றும் தலை முடியில் கதிர்வீச்சு தாக்குதல் காணப்பட்டதாக டோக்கியோ மின்சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளார்.
சிறிய அளவிலான இந்த கதிர்வீச்சு அணு உலை பகுதியில் படிந்துள்ள தூசின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என கூறும் அதிகாரிகள் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கைவிடப்பட்ட ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வீரியம்மிக்க கதிர்வீச்சு கலந்த சுமார் 300 டன் கழிவு நீர் தடுப்பு தொட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளதாக டோக்கியோ மின்சக்தி நிறுவன அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
பாதுகாப்பான உலோக தொட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் எப்படி வெளியேறியது? எந்த தொட்டியில் இருந்து வெளியேறியது என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தொட்டிகளில் இருந்து வெளியேறிய நச்சுநீர், அணு உலையை சுற்றியுள்ள நிலப்பரப்பில் தேங்கி நிற்கிறது. ஏராளமாக மணல் மூட்டைகளையும் கடந்து பாய்ந்து வந்து தேங்கியுள்ள கழிவு நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் இரைத்து மீண்டும் அணுஉலை தொட்டியில் சேகரிக்கும் முயற்சியில் ஏராளமாக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating