தேர்தல் பணிகளுக்கு தென்பகுதி அதிகாரிகளை நியமிக்க ஏற்பாடு: கூட்டமைப்பு குற்றச்சாட்டு..!!
வடபகுதியில் இடம்பெற்று வருகின்ற தேர்தல் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியபோதும் அவர் நழுவல் போக்குடனேயே செயற்பாட்டு வருகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் எவ்வாறாயினும் வெற்றி பெறவேண்டும் எனும் நோக்கில் தெற்கிலிருந்து அரசாங்க அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பணிகளில் நியமிக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபைத் தேர்தலில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் அதிகாரிகளை அம்பறைப் பகுதியிலிருந்து வடக்கிற்கு வரவழைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வடபகுதியில் ஏற்கனவே அரசாங்க அதிகாரிகள் இருக்கின்றனர். அதேபோல் வடக்கிற்கு வெளியேயும் தமிழ் அரசாங்க அதிகாரிகள் பலர் கடமையாற்றி வருகின்றனர். இவ்வாறான தமிழ் அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்காது அம்பாறையிலிருந்து சிங்கள மற்றும் முஸ்லிம் அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பணிகளில் நியமிக்கவுள்ளனர். இது ஏன் என்ற கேள்வி எமக்கு எழுந்துள்ளது?
திட்டமிட்ட வகையில் பல மோசடிகளைச் செய்தேனும் இத் தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென அரசு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
Average Rating