சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்பு: அவுஸ்திரேலியாவில் ஐவர் கைது..!!
ஆட்கடத்தலுடன் தொடர்புபட்ட 5 பேரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 12 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா வந்த 132 க்கும் அதிகமான சட்டவிரோத படகுகளுடன் கைது செய்யப் பட்டோருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆப்கான் நாட்டவர்கள், ஒரு ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுடனான சட்ட விரோத படகுகளின் எண்ணிக்கை அண்மைய மாதங்களில் அதிகரித்து வருகிறது.
இதில் ஈரான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் ஈராக் நாட்டு சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் வந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு அவுஸ்திரேலியாவை நோக்கி வருவோர் இந்தோனேஷியாவுக்கு மிக அருகில் இருக்கும் அவுஸ்திரேலிய நிலப்பரப்பான கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்படுகின்றனர்.
எனினும் இவ்வாறான சட்டவிரோத படகுகள் மோசமான நிலையிலும் அளவுக்கு அதிகமானோரை ஏற்றி வருவதன் காரணமாக பல படகுகளும் கடலில் மூழ்கி பல உயிர்களை பலிகொண்டுள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐவரும் ஆட்கடத்தல் குற்றச்செயலில் பிரதான பங்கு வகிப்பவர்கள் என அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் துணை ஆணையாளர் ஸ்டில் லங்கஸ்டர் தெரிவித்துள்ளார்.
இவர்களின் கைது மூலம் இந்த குற்றச் செயலுடன் தொடர்புபட்ட மேலும் பலரை சிக்கவைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டோர் 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 110,000 அவுஸ்திரேலிய டொலர் அபராதத்திற்கு உள்ளாக வாய்ப்பு இருப்பதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுப்பதாக பிரதான இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்து வருகின்றன.
ஆளும் தொழிற் கட்சி அண்மையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்க ளையும் பபுவா நியூ கினியாவுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஒருவர் அகதியாக கருதப்படும் பட்சத்தில் அவர் அவுஸ்திரேலியாவில் அன்றி பபுவா நியுகினியாவிலேயே மீளக் குடியமர்த்தப்படுவார் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், எதிர்க்கட்சி இதனைவிடவும் கடும் நடவடிக்கைக்கு வாக்குறுதி அளித்துள்ளது. அதன்படி, சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை முடக்க தனியான இராணுவ கட்டளைத் தளம் ஒன்றை அமைக்க பரிந்துரைக் கப்பட்டுள்ளது.
Average Rating