தவறாக விளங்கிக் கொண்டு மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க முன்னாள் அதிபர்..!!
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய செய்தியை, தவறாக புரிந்து கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர், ஜார்ஜ் புஷ், இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில், கருப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர், நெல்சன் மண்டேலா, 95. நாட்டு மக்களின் நலனுக்காக போராடிய அவர், அதிபராகும் முன்,26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்.
இவரது செயல்பாடுகளுக்காக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் மாதம், உடல்நிலை பாதிக்கப்பட்ட மண்டேலா, சிகிச்சைக்காக, பிரிட்டோரியா நகர, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த வாரம், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அமெரிக்காவின் முக்கிய பத்திரிக்கையான, ‘வாஷிங்டன் போஸ்ட்’ மண்டேலா வீடு திரும்பியதை, தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
இச்செய்தியை அரைகுறையாக படித்த, அமெரிக்க முன்னாள் அதிபர், ஜார்ஜ் புஷ்சின் செய்தி தொடர்பாளர், ஜிம் மெக்கிராத், மண்டேலா இறந்துவிட்டதாக, புஷ்சிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புஷ் அறிக்கை வெளியிட்டார். ஜார்ஜ் புஷ்சின் இந்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்த தென் ஆப்ரிக்க அரசு, ‘மண்டேலா உயிருடன் இருக்கிறார்’ என, தெளிவுப்படுத்தியது.
இதனிடையே, ஜார்ஜ் புஷ்சின் செய்தித் தொடர்பாளர், ஜிம் மெக்கிராத் தன் தவறை ஒப்புக் கொண்டுள்ளார். ”நாளிதழில் வெளியான தலைப்பு செய்தியை நான் தவறாக புரிந்து கொண்டேன். தவறான தகவலை புஷ்சிடம் கூறியதால், அவர், இரங்கல் தெரிவித்துள்ளார்.
தவறு என்னுடையதே. இதற்கு நான் வருத்தப்படுகிறேன், தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என, ஜிம் மெக்கிராத், சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார்.
Average Rating