பொலன்னறுவைக்கு மாற்றுவதனை ஆட்சேபித்து மட்டு. சிறைக்கைதி கூரையில் ஏறி போராட்டம்!
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒருவர் இன்று கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் நபர் ஒருவரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.
இவரை பொலன்னறுவையிலுள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது, குறித்த கைதி தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் ஏனைய கைதிகளுடன் அடிக்கடி முரண்படுவதுடன் ஏனைய சிறைக்கைதிகளை தாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்ததாகவும் இதன் காரணமாக அவரை பொலன்னறுவைக்கு இடமாற்ற தீர்மானித்ததாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சிறைக்கைதி மீது மேல் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றில் இரு வழக்குகளும் உள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Average Rating