குடாநாட்டு கொலைகளுடன், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு உள்ளதா??
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும் என்று காங்கேசன்துறைப் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான கமலின் உதவியாளர் ஒருவர் யாழ்.நகரில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களாகும் நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த உறுப்பினரான றெக்யன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
றெக்யனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் (கமல்), மற்றொரு உறுப்பினரான ஜசிந்தன், றெக்யனின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 9 மில்லிமீற்றர் கைத் துப்பாக்கியாலேயே றெக்யன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2006, 2007, 2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் பலர் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் 9 மில்லிமீற்றர் கைத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகளுக்கும் இப்போது கைதாகியுள்ள இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர்கள் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் றெக்யனின் கொலை தொடர்பில் விசாரணை நிறைவடைந்துள்ளது.
ஆனால் அவரது கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கமல் உட்பட்டவர்களிடம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவினர் பல கோணங்களில் விசாரணை முன்னெடுப்பர். விசாரணையின் மூலமாகவே மிகுதி விடயங்கள் தெரியவரும் என்றார்.
Average Rating