இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 63 ஆவது பிறந்தாளை அமைதியாகக்கொண்டாட அவரது ரசிகர்கள் அதிரடியாகக் கொண்டாடுகிறார்கள்.
1950 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சிவாஜி ராஓவாக பெங்களுரில் பிறந்தார் ரஜினி காந்த். பஸ் நடத்துனராக பணிபுரிந்த ரஜினி காந்த் 1975ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தனது 25ஆவது வயதில் கதவொன்றினை திறந்துகொண்டு திரையுலகில் நுழைந்தார்.
ஆரம்ப காலத்தில் வில்லானகவும் துணைப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி பைரவி படத்தின் மூலம் முழுநீள கதாநாயகன் அவதாரமெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், தில்லு முல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, தர்ம யுத்தம், பில்லா, பொல்லாதவன், முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, பாயும் புலி, நான் சிகப்பு மனிதன், வேலக்காரன், பணக்காரன், தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி எந்திரன் என தனது ஸ்டைலான நடிப்பில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.
தமிழ் சினிமாவை வியாபார ரீதியாக இந்திய மற்றும் உலகளவில் விரிவடையச் செய்ததுடன் ஆசியாவில் ஜக்கிசானுக்கு அடுத்தபடியாக பிரபலமிக்க நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உயாந்தார்.
புகழின் உச்சியில் இருக்கும் ரஜினி என்றுமே அமைதியின் வடிவமாய் ஆடம்பரமற்ற மனிதராக தன்னை மாற்றிக்கொண்டார். கடந்த வருடம் நுரையீரல் பாதிப்பினால் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டு தற்போது கோச்சடையான் எனும் புது முயற்சியில் இறங்கியுள்ளார்.
வழக்கமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களின் நலன் கருதி அவர்களை சந்திக்க விரும்பாத ரஜினி நீண்டகாலத்தின் பின்னர் கடந்த பிறந்தநாளில் சந்தித்து மகிழ்ந்தார். ஆனால் இம்முறை தனது பிறந்தநாளை பெங்களுரில் எளிமையாகக் கொண்டாடவுள்ளார். அவரது ரசிகர்கள் பெரும் விழாவாக பல்வேறு இடங்களில் கொண்டாடி வாழ்த்துகின்றனர்.
Average Rating