மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சரித்திர நாயகன் நெல்ஸன் மண்டேலாவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான குனுவில் அரச மரியாதை மற்றும் ஆயிரக்கணக்கணக்கோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நுரையீரல் பாதிப்பினால் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த மண்டேலா கடந்த 5ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்க்கின் வைத்து மரணமடைந்தார்.
தொடர்ந்து உலகின் பல நாட்டு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜொஹன்னஸ்பேர்க்கில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு திட்டமிடப்பட்டது போன்று இன்று அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தனது சொந்த ஊரான குனுவில் தனது உடல் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மண்டோலாவின் விருப்பமாகும். இவரது இறுதி நிகழ்வில் மண்டேலாவின் குடும்ப வழக்கப்படி இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இ;தில் ஆயிரக்கணக்கான கிராம மக்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்களது தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
‘மண்டேலா ஒரு மாமனிதர். உங்களை நாங்கள் ஒரு போதும் மறவோம். நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டியதை செய்துவிட்டீர்கள்’ என தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி ஷுமா தனது உரையில் குறிப்பிட்டார்.
ஒடுக்கப்பட்ட தனது கறுப்பின மக்களுக்காக போராடி 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த மண்டேலா தென்ஆபிரிகாவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்று அவரது சமூகத்தின் அபிலாசைகளை வெற்றிகொள்ளச் செய்து ஒவ்வொரு தென் ஆபிரிக்க பிரஜையின் மனதிலும் குடியேறினார்.
சரித்திர நாயகன் மண்டேலாவின் உடல் இன்று ஓய்வெடுத்துக் கொண்டாலும் அவரது சிந்தனைகள் என்றும் ஓய்வெடுக்கப் போவதில்லை.
Average Rating