வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சிகனின் கொலை தொடர்பில் கைதான வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் ஊர்காவற்றுறை நீதவான் ஆர்.எஸ். மஹேந்திரராஜா முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வட மாகாண சபையின் எதிர்க்கட்சிக் தலைவர் மற்றும் றெக்சிகனின் மனைவி உள்ளிட்ட மூவரையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி டானியல் றெக்சிகன் நெடுந்தீவில் உள்ள அவரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவரது மரணம் ஆரம்பத்தில் தற்கொலை எனக் கூறப்பட்ட போதிலும், பின்னர் அவர் தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்தமை பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating