பேச்சுக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் கைது நடவடிக்கை
தமிழக மீனவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையானது இரு நாட்டு மீனவர்களிடையே தற்போது சுமுகமான முறையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றப் போக்கைக் கெடுத்து விடுமாகையால் அவ்வாறு கைதுசெய்வதனை நிறுத்திக் கொள்ளுமாறு பிரதமர் காரியாலயத்திற்கான மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி இலங்கைக் கடற்படையினரைக் கேட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது சென்னையில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இந்தப்பிரச்சினைக்கு சிநேகபூர்வமான தீர்வொன்றைக் காண்பதற்கான சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
தமிழக மீனவர்களைக் கைதுசெய்யும் தொடர் நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளில் மேலும் காணப்பட்டுவரும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையவுள்ளதுடன் பேச்சுவார்த்தை திடீரென முறிவடையவும் கூட வழிவகுக்கலாமெனவும் இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கதெனவும் அவர் மேலும் கூறினார்.
Average Rating