ஆஸ்திரேலியாவில் மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தை
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து 100 கி.மீ தென்கிழக்கே உள்ள மோர்நிங்டன் தீபகற்பப் பகுதியில் டையப் ஓவல் மைதானம் உள்ளது. அங்கு நேற்று மாலை ஜூனியர் அணியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 11 வயதான லியூக் பட்டியும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனைப் பார்ப்பதற்காக அவனது தந்தை கிரெக் (54) அங்கு வந்துள்ளார்.
ஆட்டம் முடிந்த பின்னர் அந்த சிறுவன் சரியாக விளையாடவில்லை என்று அவனது தந்தை கிரிக்கெட் மட்டையாலேயே அவனது தலையில் பலமுறை அடித்துள்ளார். இதனைக் கவனித்த யாரோ காவல்துறைக்குத் தகவல் சொல்ல, அவர்கள் அங்கு வந்தபோது கிரெக் கையில் சிறிய கத்தியுடன் நிற்பதைப் பார்த்துள்ளனர். சிறுவனோ அருகே இறந்து கிடந்துள்ளான். மிளகாய், மிளகுத்தூள் தூவி அவரை அடங்கச் செய்த முயற்சிகள் பலிக்காமல் போகவே, போலீசார் அவரது மார்பில் சுட்டுள்ளனர்.
அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிரெக் இன்று காலை இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்தான் அந்த சிறுவனின் தந்தையாக இருக்கக்கூடும், இறந்த சிறுவனின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் கொடூரமான இந்தக் காயங்களினாலேயே அவன் இறந்துள்ளான் என்று காவல்துறை கமாண்டர் டக் பிரையர் தெரிவித்துள்ளார்.
இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத சிறுவனின் தாய் ரோசி பட்டி கூறுகையில், “என்னை விட்டு பிரிந்து வாழும் என் கணவருக்கு நீண்டநாளாக மனநிலை சரியில்லை. வன்முறைத் தாக்கம் அவரிடத்தில் காணப்பட்டது. ஆனால் மகனை பார்க்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது அங்கு பார்வையாளர்கள் இருப்பதால் என் மகன் பாதுகாப்பாக இருப்பான் என்று நம்பினேன்” என்று கூறினார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவரான அவர், இந்த சம்பவம் நடந்தபோது சில மீட்டர் தொலைவிலேயே இருந்துள்ளார். இருப்பினும் அவரால் தனது மகனைக் காப்பாற்ற முடியாமல் போனது அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating