குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது எப்படி? -பாடகி ஜானகி
குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது குறித்து கோவையில் நடந்த விழாவில் பின்னணி பாடகி ஜானகி பேசினார்.
கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி சார்பில் விழா கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடந்தது.
இதில் சினிமா பின்னணி பாடகி ஜானகி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் கடந்த 1957–ம் ஆண்டு முதல் சினிமாவில் பாடத்தொடங்கினேன். இதுவரை பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி உள்ளேன். சிறுவயதிலேயே எனக்கு பாடும் திறமை இருந்ததால் பாடல் பாடுவதை எளிதாக கற்றுக்கொள்ள முடிந்தது.
இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளேன். அதில் ‘நெஞ்சை கிள்ளாதே’ என்ற படத்தில் குழந்தை குரலில் பாடினேன்.
அதுபோன்று மற்றொரு படத்தில் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு குரலில் பாட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். அந்த பாடலை பாடும்போது மட்டுமே எனக்கு பயம் ஏற்பட்டது. இருப்பினும் பல்வேறு தெய்வங்களை வேண்டி, அந்த பாடலை பாடி முடித்தேன்.
பெரும்பாலும் சிறு குழந்தைகளின் குரல், இனிமையாக இருக்கும். சிறுவயதில் இருந்தே நான் பெரியவர்கள் போலவும், சிறிய குழந்தை போன்றும் பேசக்கூடிய திறமையை கடவுள் எனக்கு கொடுத்தார்.
அதுவே நான் பல குரலில் பாடுவதற்கு ஏற்றதாக அமைந்தது. குழந்தை குரல், இளம்பெண், மூதாட்டி, ஆண் குரல் உள்பட பல்வேறு குரலில் பாடல்களை பாடி உள்ளேன். ஆனால் நான் பள்ளிக்கு சென்றது கிடையாது.
இவ்வாறு சினிமா பாடகி ஜானகி பேசினார்.
விழாவில் பங்கேற்றவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, ‘ஊருசனம் தூங்கிடுச்சி’ என்ற பாடலையும், சிறு குழந்தை குரலில் படித்த பாடலான கண்ணா நீ எங்கே… வா… வா… நீ எங்கே… என்ற பாடலையும் ஜானகி பாடினார்.
விழாவில் அந்த பள்ளி சார்பில் நவீன்குமார், ஆசிரியர்கள் புவனா, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Average Rating