ஜெனிவாவை நம்பியதால் கூட்டமைப்பு முதலைக்கண்ணீர் வடிக்கிறது: டக்ளஸ்
தமிழர் பிரச்சினைக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தின் உப அலுவலகத்தில் இன்றைய தினம் (9) இடம்பெற்ற நிலையப் பணியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வு காண்பதற்கு ஜெனீவா கூட்டத்தொடரே சிறந்தது என்றும் அதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்றும் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களது பிரச்சினையை தீராப்பிரச்சினையாக வைத்துக் கொண்டு அதன் மூலம் தமது அரசியலை தொடர்வதே அவர்களது நோக்கமாகும்.
முன்னர் அபிவிருத்தியல்ல உரிமையே முக்கியம் என்றவர்கள் தற்போது அபிவிருத்தியின் முக்கியத்துவம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றார்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனிடையே இ.போ.ச வடபிராந்திய போக்குவரத்து சபையின் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், அது எமது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதேசமயம், அதன் மூலம் உரிய தீர்வினைக் காணவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Average Rating