குழந்தையை கடத்தியதாக பீதி: வடமாநில பெண் போலீசில் ஒப்படைப்பு
சென்னை பூங்கா நகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வடமாநில பெண் கைக்குழந்தையுடன் நீண்ட நேரம் நின்றார். குழந்தையின் அழுகையை பற்றி கவலைப்படாமல் பயணிகளிடையே புகுந்து சென்றார்.
இதனால் பெண் பயணிகளும், அங்கு நின்றவர்களும் குழந்தையை அந்த பெண் கடத்தி வந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து குழந்தையுடன் இருந்த பெண்ணை பிடித்து எஸ்பிளனேடு போலீசில் ஒப்படைத்தனர். பெண்ணிற்கு தமிழ், ஆங்கிலம் தெரியாததால் விசாரிக்க முடியாமல் போலீசார் திணறினார்.
பின்னர் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களை அழைத்து பெண்ணிடம் பேச்சு கொடுத்து விபரத்தை கேட்டனர்.
அப்போது அவர் ராஜஸ்தானை சேர்ந்த சபிதா என்பதும், பெற்றோர், கணவரை இழந்ததால் இங்கு கடந்த ஒரு வாரமாக ரெயில்வே பிளாட்பாரங்களில் தங்கி 7 மாத பெண் குழந்தையுடன் பிச்சை எடுத்து வந்ததும் தெரிந்தது.
இதைதொடர்ந்து குழந்தையையும், சபிதாவையும் போலீசார் பெரம்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் பூங்கா நகர் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
Average Rating