விமானத்தைத் தேட வான் பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதி..
காணாமற்போன விமானத்தைத் தேடுவதற்கு தமது வான் பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதி வழங்கியுள்ளது காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளுக்காக இலங்கையின் வான் பரப்பைப் பயன்படுத்த நான்கு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
மலேசிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் மலேசியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை வான் பரப்பிற்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமானத்திலிருந்து இறுதியாக வெளியான தகவல் உதவி விமானியால் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
குறித்த விமானத்தின் விமானியான ஷாரிக் அஹமட்டின் நீண்ட நாள் நண்பர் அவர் தொடர்பில் தகவல்களைத் தெரிவித்துள்ளார். விமானியின் நண்பரான கிறிஷ் நிஷேன் தெரிவித்ததாவது; ‘தற்கொலை செய்துகொள்ளல் மற்றும் விமானத்தைக் கடத்தல் போன்ற செயற்பாடுகளுடன் விமானிகள் தொடர்புபட்டிருப்பதை ஊகிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்வார் என்று கூற இயலாது. அவர் திட்டமிட்டு விமானத்தைக் கடத்தியிருக்க வாய்ப்பில்லை. அவர் மிகவும் திறமையானவர். பயணிகளின் உயிர் மற்றும் மலேசிய விமான சேவையின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக எந்நேரமும் அவர் செயற்படுபவர்.’
இதேவேளை, தமது உறவுகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமற்போயுள்ள விமானத்தில் இருந்த சீனர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது உறவினர்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுமாறு அவர்கள் மலேசிய அரசாங்கத்தைக் கோரியுள்ளனர்.
விமானம் காணாமற்போய் 10 நாட்களைக் கடந்த நிலையில் அதில் இருந்த சீனர்களின் உறவினர்கள் தகவல்களை எதிர்பார்த்து பீஜிங் ஹோட்டலில் காத்திருக்கின்றனர்.
Average Rating