தேடப்படுவோருடன் தொடர்பு வைக்க வேண்டாமென, முன்னாள் போராளிகளுக்கு எச்சரிக்கை
புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சந்திப்புகளுக்கு அழைக்கும் இராணுவத்தினர், தேடப்படும் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று குறிப்பிட்டு மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவர் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் வடக்கில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு பிரதேச ரீதியாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றது இராணுவம்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரால் இவ்வாறான சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதன்போது தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இருவருடனும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்பை பேணக் கூடாது என்றும், அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பணத்துக்காக பயங்கரவாத வேலைகளில் ஈடுபடுமாறு யாராவது பணித்தால் அவர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், கடந்த காலங்களில் நடந்ததே உங்களுக்கு மீண்டும் நடக்கும் என்றும் இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர் என்றும் குறித்த சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating