பாகிஸ்தானில் விளையாட்டு பொம்மை குண்டு வெடித்து சிறுவன் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து தஞ்சம் புகுந்த அகதிகள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த நவ்ஷேரா நகரத்தின் புறநகர்ப் பகுதியான காக்கி என்ற இடத்தில் வசித்துவரும் ஆறு சிறுவர்கள் இன்று காலையில் அங்கிருந்த குப்பைத் தொட்டி ஒன்றில் வீசியெறியப்பட்டிருந்த ஒரு விளையாட்டு பொம்மையைக் கண்டெடுத்துள்ளனர்.
அதனை வைத்து அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த பொம்மை வெடித்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் நான்கு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பொம்மையின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததினால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரியான குர்ரம் ரஷீத் தெரிவித்தார். பத்து வயது நிரம்பிய ஆப்கானிஸ்தான் சிறுவன் இறந்தததாக மற்றொரு அதிகாரியான சயீத் உல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலும், மேற்கத்திய நாடுகளிலும் தீவிரவாதத்தைத் தூண்டிவரும் தலிபான் இயக்கத்தினரின் மறைவிடங்களாக பாகிஸ்தானின் பழங்குடியின பிரதேசமான வரிசிஸ்தானும், பல வடமேற்கு நகரங்களும் இருந்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றது.
இத்தகைய தீவிரவாதத்தை அடக்க பாகிஸ்தானும் பல வருடங்களாகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இருப்பினும், தீவிரவாதத் தாக்குதல்களின் போது பயன்படுத்தப்படும் இதுபோன்ற விளையாட்டு பொம்மை வெடிகுண்டுகளால் இதுவரை டஜனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அங்கு பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating