குழந்தையின் அழுகையை நிறுத்த பாலுடன் மதுபானத்தை கலந்து கொடுத்த தந்தை கைது
3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது.
லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச் சேர்ந்த அக்சியோ எஸ்ரேடா, (37வயது) என்ற தந்தையே தனது 3 மாத மகனான கார்லோவுக்கு பாலுடன் மதுபானத்தை கலந்து வழங்கி அவனது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
சம்பவ தினம் அகாசியோ மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவேளை குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அவர் கடும் மன அழுத்தத்துக்குள்ளானார்.
இந்நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முகமாக அவர் குழந்தையின் பால்புட்டியில் மதுபானத்தை கலந்து வழங்கியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது குழந்தையின் தாயாரான சில்வியா வேலைக்குச் சென்றிருந்தார்.
வீடு திரும்பிய சில்வியா தனது குழந்தை மரணமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் குழந்தையின் புட்டிப்பாலை சந்தேகத்தில் முகர்ந்து பார்த்தபோது அதில் வித்தியாசமான மணம் வெளிப்படுவதை உணர்ந்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்தே அகாசியோ குழந்தைக்கு பாலில் மதுபானத்தை கலந்து வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அகாசியோ சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
மிகக் குறைந்த அளவிலான அற்கக்கோல் குழந்தையொன்றின் சுவாசம் மற்றும் குருதி குளுக்கோசு மட்டம் என்பவற்றை பாதித்து உயிராபத்தை விளைவிக்கக்கூடியது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Average Rating