பரந்தனில் இறந்தவர், புலிகளின் புதிய தலைவர்(?) கோபி அல்ல..!
கிளிநொச்சி பரந்தன் ஸ்ரார் உணவகத்திற்கு பின்னால் இருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கண்டி கலாவய சேர்ந்த சிவலிங்கம் ரமேஸ் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ஆம் திகதி குறித்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூற்று பரிசோதனையினை மேற்கொள்ளும் போது அவரது காற்சட்டைப்பையில் இருந்து சிம் காட் ஒன்று மீட்கப்பட்டது.
அதனையடுத்து மேற்கொண்ட மேலதிகவிசாரணையில் குறித்த நபரின் தங்கையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் காட் என்றும் இவர் கண்டியை சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டது.
அதன்படி நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாரூக் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த சடலம் தேடப்பட்டு வரும் கோபி என்பவருடைய சடலமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating