அபுதாபி: இரண்டாம் மனைவியை அடித்துக் கொன்றவர், முதல் மனைவியுடன் கைது
அபுதாபியின் புறநகர் பகுதியான பனி யாஸ் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு பெண்கள் அபுதாபி போலீசாரிடம் திடுக்கிடும் புகார் ஒன்றினை அளித்தனர்.
தங்களது தந்தை, தனது இரண்டாவது மனைவியை ஒரு தனியறையில் அடைத்து வைத்து, சரியாக உணவு தராமல், அடித்து, உதைத்து சித்திரவதை செய்து வருவதாகவும், அவர் இறக்கும் தருவாயில் கிடப்பதாகவும் புகாரில் அந்த பெண்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தங்களது தாயாரும் தந்தையுடன் சேர்ந்துக் கொண்டு, இரண்டாவது மனைவிக்கு பிறந்த 2 ஆண் குழந்தைகளை அடித்து, உதைத்து, சூடு வைத்தும் கொடுமைப்படுத்துவதாக அந்த பெண்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, போலீசார் அந்த வீட்டுக்கு செல்வதற்குள், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன், போதிய போஷாக்கு இல்லாததால் சோகை நோயால் தாக்கப்பட்டவர் போல் ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவரது உயிரை காப்பாற்ற முடியாததை எண்ணி கவலைப்பட்ட போலீசார், இறந்து கிடந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது முதல் மனைவியிடம் நடத்திய விசாரணையில் புகார் அளித்த பெண்கள் கூறிய அனைத்தும் உண்மைதான் என்பது தெரியவந்தது.
இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலின் பல எலும்புகள் உடைந்து இருந்ததையும், ஊட்டச்சத்து குறைவால் சருமம் வெளுத்துப் போய் இருந்ததையும் டாக்டர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவரது மகன்களுக்கும் இதே நிலை என்பதை அறிந்த போலீசார், கொலை குற்றத்துக்காக அந்த கொடுமைக்கார கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.
Average Rating