ஹட்டனில் தற்கொலை செய்த மாணவியின் இறுதிக் கடிதம்
நுவரெலியா ஹட்டன் – குயில்வத்தை தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமி எழுதிவைத்துள்ள கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (08.05.2014), குறித்த சிறுமி பாடசாலை விட்டு வந்து மாலை நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்தநிலையில், சிறுமியால் எழுதபட்டிருந்த கடிதம் ஒன்றை மீட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அதில், சிறுமி பாடவேளையின் போது தாள் ஒன்றில் பாடல் எழுதி கொண்டிருந்ததாகவும், அதனை கண்ட ஆசிரியர் ஒருவர் இதனை செய்யவேண்டாம்..
நீ சென்று நாளை பாடசாலைக்கு வரும்போது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வா என கூறியதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதனால் தன்னை தனது நண்பர்கள் கேலிசெய்ததாகவும் இதன் காரணமாக எனக்கு மணசங்கடம் ஏற்பட்டதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறித்த சிறுமி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, இது குறித்து சிறுமியின் தந்தை புஸ்பநாதனிடம் கேட்டபோது, நானும் எனது மனைவியும் நேற்று மாலை விறகு சேகரிப்பதற்காக சென்று இருந்தோம்.
விறகு சேகரித்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் எனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாள்.
ஆனால் எங்கள் குடும்பத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating