சீமாந்திரா தேர்தலில் சிரஞ்சீவியை ஜீரோ ஆக்கிய தம்பி பவன்கல்யாண்
ஆந்திரா பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் சீமாந்திராவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மாநிலத்தை பிரித்ததால் கோபம் அடைந்த மக்கள் காங்கிரசை வீழ்த்தியதுடன் வேட்பாளர்கள் அனை வரையும் டெபாசிட் இழக்க வைத்தனர்.
காங்கிரசின் வீழ்ச்சி தேர்தல் பொறுப்பாளராக இருந்த சிரஞ்சீவிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் 30 ஆண்டு காலம் கொடிகட்டி பறந்த சிரஞ்சீவி 2009–ம் ஆண்டு அரசியலில் குதித்து பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார். 2011–ல் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். இதன் பிரதிபலனாக மத்திய மந்திரி பதவி அளிக்கப்பட்டது.
மாநில பிரிவினை காரணமாக காங்கிரசில் இருந்து முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்கள் விலகிய போதும் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தார். இதையடுத்து காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
இதற்கிடையே தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் சொந்த தம்பியும் நடிகருமான பவன்கல்யாண் ‘ஜனசேனா’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த அவர் காங்கிரசை கடுமையாக சாடினார்.
நரேந்திர மோடி அலை, மற்றும் பவன்கல்யாண் பிரசாரம் ஆகியவை தேர்தலில் காங்கிரசை அதாள பாதாளத்தில் தள்ளியது. சீமாந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதி மற்றும் 25 பாராளுமன்ற தொகுதியில் ஒன்றில் கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. மாறாக அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
நடிகர் பவன்கல்யாணின் பிரசாரத்துக்கு மத்தியில் சிரஞ்சீவியின் பிரசாரம் எடுபடாமல் போய் விட்டது. இதன் மூலம் அண்ணன் சிரஞ்சீவியை ஜீரோ ஆக்கிய நடிகர் பவன்கல்யாண் சீமாந்திரா மக்கள் மனதில் ஹீரோவாக விசுவரூபம் எடுத்து நிற்கிறார்.
Average Rating