மஹிந்த அழைப்பை ஏற்று விரைவில் இலங்கை வருகிறார் நரேந்திர மோடி!
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி சென்ற இலங்கை ஜனாதிபதி நேற்று (27) நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து ஜுலை மாதத்திற்குப் பின்னர் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய சந்திப்பின் போது இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை, தமிழக விவகாரம் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், தமிழர்களுக்கு சம உரிமை, நீதி மற்றும் அமைதி கிடைக்கவும் நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் மோடி வலியுறுத்தினார்.
இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, மீள் குடியேற்றம், மறு கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களை மோடியிடம் ராஜபக்ஷ விளக்கினார்.
முந்தைய அரசின் திட்டங்களை தற்போதையை அரசிலும் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இலங்கை தமிழர் நலனில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக மோடி அப்போது தெரிவித்துள்ளார்.
Average Rating