தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம்
பிரபல வில்லி நடிகை சகுந்தலா திடீர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. தமிழில் விக்ரமின் ‘தூள்’ படத்தில் சகுந்தலா வில்லியாக நடித்தார். இதில் சொர்ணாக்கா என்ற கேரக்டரில் அவர் வந்தார். அடியாட்களுடன் அப்பாவிகளை கொன்று வீசும் குரூர வில்லியாக தோன்றினார். இந்த வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.
ரவுடி பெண்களை பிற படங்களில் சொர்ணாக்கா என பேசும் அளவுக்கு இந்த கேரக்டர் வலுவாக அமைந்தது. விஜய்யின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக வந்தார். மருமகனை எம்.எல்.ஏ. வாக்க இவர் செய்யும் அடாவடி வில்லத்தனங்கள் ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் முன்னணி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர்.
1981–ல் ‘மா பூமி’ என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தார். 2003–ல் வெளியான ‘ஒக்கடு’ தெலுங்கு படம் சகுந்தலாவை முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சகுந்தலா பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள் பிரபலமானவை இதுவே அவரை பெரிய நடிகையாக்கியது.
தெலுங்கு ரசிகர்கள் சகுந்தலாவை அடுத்த சூர்யகாந்தம் என்று அழைத்தனர். ஐதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.
சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
Average Rating