வாத்துகளுக்கு உதவியதால் சாலை விபத்து: கனடா பெண் மீதான குற்றம் நிரூபணம்
மேற்கு தாய்லாந்தில் கூட்டமாக வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் போக்குவரத்தை நிறுத்தியதாக ஒரு செய்தி நேற்று வெளிவந்திருந்தது. இதுவும் அதுபோன்றே வாத்துகளினால் ஏற்பட்ட ஒரு சம்பவம் தான். ஆனால் இதில் வாத்துகள் சாலையைக் கடப்பதற்காக உதவிய பெண் தன்னை அறியாமல் இரண்டு பேர் பலியாகக் காரணமாக இருந்து அதனால் தண்டனையும் பெற்றதுதான் செய்தியின் சாராம்சம் ஆகும்.
கடந்த 2010ஆம் ஆண்டில் கனடாவின் தெற்கே உள்ள மாண்ட்ரீல் நகரத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் எம்மா சோர்நோபஜ்(25) என்ற இளம்பெண் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சாலை நடுவே வாத்துகள் கூட்டமாக அலைந்து கொண்டிருப்பதை கண்ட அவர் தனது காரை இடது பக்க லேனில் நிறுத்திவிட்டு அவை பத்திரமாக சாலையைக் கடக்க உதவி செய்துகொண்டிருந்தார்.
ஆனால் அப்போது 105 கி.மீ வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரது காரின் பின்புறம் மோதியது. அதில் பயணித்துக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவரது 16 வயது மகளும் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர்.
எம்மாவின் கவனக் குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என்று கருதப்பட்டு அவர்மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி எம்மாவின் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ளார். எனவே இவர் மீண்டும் விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்திற்கு வரும்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating