பெண் பாதிரியார்களுக்கு அனுமதி கிடைக்குமா? வாக்கெடுப்புக்கு தயாராகும் இங்கிலாந்து திருச்சபை!!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்மானிக்கப்பட முடியாமல் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவான பெண் பாதிரியார்களை அனுமதிப்பது குறித்த முக்கியக் கூட்டம் ஒன்று இன்று இங்கிலாந்து திருச்சபையில் கூடியுள்ளது. இதற்காக பாதிரியார்கள், ஆயர்கள் மற்றும் சாதாரண உறுப்பினர்கள் என்று அனைவரும் இன்று அங்கு குழுமியுள்ளனர். பொதுவான இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வரும் திங்கட்கிழமை அன்று இந்தத் தீர்மானம் குறித்த இறுதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பெண் பாதிரியார்களை அனுமதிப்பது குறித்த முன்மொழிவு ஒன்று கடந்த 2012ஆம் ஆண்டு பொதுமக்கள் கண்டனத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் அதன்பின்னர் திருச்சபையின் புதிய தலைவராகப் கேன்டர்பரியின் பேராயரான ஜஸ்டின் வெல்பி பொறுப்பேற்றார். எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான இவர் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதுடன் பெரும் கலாச்சார மாற்றம் ஏற்படவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார். எனவே இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கும்விதமாக திருச்சபையானது பழைமைவாதிகளிடம் இருந்து வெளிவரும் எதிர்ப்புகளையும் தாண்டி வடக்கு அயர்லாந்தில் சமாதானப் பணிகளுக்குப் பணியாற்றிய முக்கியப் புள்ளிகளையும் இதில் ஈடுபட வைத்துள்ளது.
இந்த முயற்சிகளின் விளைவாக வரும் திங்கட்கிழமை அன்று வடக்கு இங்கிலாந்து நகரான யார்க்கில் நடைபெறும் வாக்கெடுப்பில் இதற்கான அனுமதி கிட்டும் என்று மூத்த மத குருமார்களும், அதிகாரிகளும் கருதுகின்றனர். அவ்வாறு நடைபெறாமல் இந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டால் அங்கு அதிர்ச்சியும், குழப்பமுமே நிலவும் என்று பொதுக் குழுவின் செயலாளரான வில்லியம் பிட்டால் சென்ற மாதமே குறிப்பிட்டிருந்தார். 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதிக்குப்பிறகு திருச்சபையின் முடிவுகள் இதுநாள்வரை எந்த ஒரு வாக்கினாலும் தீவிரமாகத் திசை திரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஏனெனில் பெண் துறவிகளுக்கான அனுமதியை அன்றுதான் திருச்சபை அளித்ததாகக் கூறப்படுகின்றது.
Average Rating