காதலை எதிர்க்கும் பெற்றோர் கவுரவக்கொலை செய்வார்கள் என பெண் அச்சம்: பாதுகாப்பளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!
கோவையை சேர்ந்தவர் 19 வயதான மஞ்சு. அவர் தன்னுடைய காதலனான சுதாகர் என்பவரை கடந்த ஏப்ரல் 13ந் தேதி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமணத்தை ஏற்க மறுத்த அவரது பெற்றோர் இருவரையும் பிரித்து மஞ்சுவை ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பிவிட்டனர்.
தன்னுடைய மனைவியை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதாகர் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து கடந்த ஜூலை 10ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான மஞ்சு, தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். அதன்படி மஞ்சுவை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர். ஆனால் சில தினங்களிலேயே நீதிமன்றத்தில் மீண்டும மனு அளித்த மஞ்சு, தன்னை பெற்றோர்கள் மிரட்டியதாகவும், தன் மீதும், தன் கணவர் மீதும் குற்றவழக்குகள் பதிவு செய்து சிறைக்குள் தள்ளுவோம் என அச்சுறுத்தியதாகவும் கூறினார்.
இதனையடுத்து இன்று இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன் மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களது முந்தைய உத்தரவுகளை திரும்ப பெற்ற நீதிபதிகள், மஞ்சு தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதால் வேறு எதைப்பற்றியும் யோசிக்கத்தேவையில்லை என்று கூறினர். மேலும் மஞ்சுவின் பெற்றோரால் அவருக்கும் அவரது கணவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களை போலீசில் புகாரளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவ்வாறு புகார் அளிக்கப்பட்டால் போலீசார் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் இருவரும் உத்தரவு பிறப்பித்தனர். ஏற்கனவே மஞ்சுவின் பெற்றோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியபோது, தங்கள் மகள் தனது நிலையை மாற்றிக்கொண்டதால் தாங்கள் இனி அவள் விஷயத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating