ஆபாச எஸ்.எம்.எஸ்.விவகாரம்: புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது!!
திருச்சி, சோமரசம் பேட்டை அருகே உள்ள இனாம்புலியூர் கீழத் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (32). ஊராட்சி உறுப்பினரான இவர் மெடிக்கல் ஸ்டோரும் நடத்தி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த குமார் (28). கடந்த மாதம் 21–ந் தேதி குமாரின் செல்போனில் இருந்து செல்வராஜ் என்பவருக்கு அவரது சகோதரி குறித்து ஆபாச எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
இதையடுத்து செல்வராஜ், அவரது சகோதரியின் கணவர் சின்னமணி மற்றும் 5 பேர் சேர்ந்து குமாரை தாக்கினர். இது குறித்து குமாரும், தமிழ் செல்வனும் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையம் சென்று புகார் செய்துள்ளனர். புகாரை அடுத்து செல்வராஜ், சின்னமணி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜாமீனில் வந்தனர்.
குமார் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்ப உதவியதும், தங்கள் மீது புகார் கொடுக்க தூண்டியதும் தமிழ்செல்வன் தான் என நினைத்த செல்வராஜ் மற்றும் சின்னமணி அவர்மீது ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் தமிழ் செல்வன் நேற்று காலையில் தனது உறவினர் பழனிச்சாமி என்பவருடன் வியாழன் மேட்டில் உள்ள டி.வி.டி. பழுது பார்க்கும் கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியில் வந்தபோது செல்வராஜ், கோப்பு கிராமத்தை சேர்ந்த சந்திரன் (எ) கிருஷ்ணன் (26), அதே ஊரை சேர்ந்த பிரவீன் (19) ஆகிய 3 பேரும் தமிழ்செல்வனை உருட்டு கட்டையால் தாக்கினர். உடன் இருந்த பழனிச்சாமிக்கும் அடி விழுந்தது.
இதில் நிலை குலைந்து விழுந்த தமிழ்செல்வனை மூவரும் கத்தியால் சரமாரியாக குத்தினர். அவர் குடல் சரிந்த நிலையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்செல்வன் இறந்தார்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தமிழ்செல்வனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சோமரசம் பேட்டை போலீசார் செல்வராஜ், சந்திரன், பிரவீன் 3 பேரையும் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வனுக்கு கடந்த புதன் கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டது அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating