காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் சேர்த்து வையுங்கள்: தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நாகை. பெண் புகார்!!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள் கன்னிகா பரமேஸ்வரி. இவர் தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
வேதாரண்யம் ஆயக்காரன்புலம் மலையன்குத்தகை வடக்கு பகுதியை சேர்ந்த வேதையன் என்பவரின் மகன் பாண்டியராஜன் என்கிற ராஜா. இவரும் நானும் 5 வருடங்களாக காதலித்து வந்தோம். அப்போது அவர் திருமணம் செய்வதாக உறுதி அளித்ததால் நான் அவரது ஆசைக்கு இணங்கினேன்.
இந்நிலையில் அவரது வீட்டில் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதன்பேரில் வேதாரண்யம் துணை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து வேறொரு பெண்ணுடன் அவருக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு அவரது குடும்பத்தில் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த திருமணம் வருகிற ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. எனவே போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Average Rating