வாய்ப் புற்றுநோய்க்கு ஒவ்வொரு 6 மணி நேரமும் ஒருவர் பலி!!
புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்துக்கு ஒரு மனித உயிர் பலியாகி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கிராமப்புறம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் பலர், இந்நோயின் தாக்கத்தை பற்றி அறிந்துக் கொள்ளாமலே இறந்துப் போய் விடுகின்றனர். அவர்களையும் இந்த கணக்கில் சேர்த்தால் இந்த புள்ளி விவரம் பன்மடங்காக அதிகரித்திருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்தியர்களிடையே அதிகரித்து வரும் புகை பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களை மெல்லும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாய்ப் புற்றுநோய் தொடர்பான மரணங்களும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
புகையிலையை முற்றிலுமாக ஒழித்தாலன்றி, இந்த மரண விகிதத்தை தவிர்க்க முடியாது என்று கூறும் புற்று நோய் ஆராய்ச்சி துறை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் ‘புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் செய்து தந்துவிட்டு, நாடு முழுவதும் புகையிலையை பயிரிடுவதையே முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர்.
புற்று நோய் தாக்கத்தினால் பலியாகும் நோயாளிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் முதலிடத்தையும், மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating