என் கணவருக்கு குட்டி வீரப்பன் என்று கர்நாடக வனத்துறையும், காவல் துறையும் பட்டப்பெயர் வைத்துள்ளனர்!!
சந்தன கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் மரணம் அடைந்த பிறகு இப்போது ‘குட்டி வீரப்பன்’ என்ற பெயரில் ஒருவர் உருவாகி உள்ளார்.
இந்த குட்டி வீரப்பனின் நிஜப்பெயர் சரவணன். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் அடுத்த தெற்கு ஊஞ்சப்பொறை என்ற ஊர் ஆகும்.
குட்டி வீரப்பன் கர்நாடக வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதாக கர்நாடக மாநிலம் கொள்ளேகால் வன அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை போட்டு உள்ளனர்.
குட்டி வீரப்பனை கர்நாடக மாநில வனத்துறை அதிகாரி வாசுதேவ மூர்த்தி சுட்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார். மேலும் குட்டி வீரப்பன் மீது யானை, புலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதாக பல வழக்குகளையும் போட்டுள்ளார்.
இதேபோல் மேட்டூர் வனத்துறை சார்பிலும் குட்டி வீரப்பன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது குட்டி வீரப்பன் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
குட்டி வீரப்பன் மனைவி பெயர் சஞ்சலா (வயது 26). இவர் ஜெயிலில் இருக்கும் தன் கணவரை காப்பாற்ற கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். சஞ்சலா மீன்களை சுத்தம் செய்யும் வேலை செய்கிறார். தினமும் ரூ.50 மட்டும் கூலி வாங்கி வருகிறார்.
தன் கணவர் குறித்து சஞ்சலா கண்ணீர் மல்க கூறியதாவது:–
நான் தினமும் மீன்கள் கழுவி 50 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறேன். என் கணவர் சிறைக்கு போன சமயத்தில் என் மூத்த மகள் சுமதி வயசுக்கு வந்து விட்டாள். என் கையில் ஒரு பைசா கூட கிடையாது. என் மாமனாருக்கும் வயசாகி விட்டது. அவரிடமும் காசு பணம் இல்லை. என் மகள் சுமதிக்கு எங்கள் குல தெய்வ வழக்கப்படி வீடு சேர்த்தல் நிகழ்ச்சி நடத்த வேண்டும். சுமதியின் தாய் மாமன் குப்புசாமி ஏமனூரில் உள்ளார். சீர் செய்ய என்னிடமும் பணம் இல்லையே என்று அவர் அழுதது எனக்கு பரிதாபமாக இருந்தது.
என் கணவருக்கு ‘குடடி வீரப்பன்’ என்று கர்நாடக வனத்துறையும் காவல் துறையும் பட்டப்பெயர் வைத்து உள்ளனர். அவரை வீரப்பனுடன் ஒப்பிட்டு கடுமையாக தண்டிக்க முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு சஞ்சலா கூறினார்.
குட்டி வீரப்பன் வழக்கில் ஆஜர் ஆகி உள்ள வக்கீல் அந்தியூர் ஆ.ஜூலியஸ் கூறும் போது, ‘‘ குட்டி வீரப்பன் மகள் சுமதிக்கு நடத்தப்படும் வீடு சேர்த்தல் நிகழ்ச்சிக்கு குட்டி வீரப்பன் நேரிடையாக வந்து கலந்து கொள்ள விரைவாக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகுவோம். இது தொடர்பாக உயர்நீதி மன்ற வழக்கறிஞர் விஜியேந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
Average Rating