பாலியல் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!!
2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக இந்திய மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை இணை அமைச்சரான கிரண் ரிஜ்ஜு மாநிலங்களவையில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா குற்றப்பிரிவு எடுத்த சர்வேயின் படி 2010 ஆம் ஆண்டு அதிகபட்சமாக அமெரிக்காவில் 85,593 பாலியல் பலாத்கார சம்பவங்களும், அதை தொடர்ந்து பிரேசிலில் 41,180 பலாத்கார சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த வரிசையில் இந்தியா 22,172 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் 3வது இடத்தை பிடித்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
அதே சமயம் மக்கள் தொகை கணக்கீட்டின் படி பார்த்தால் அமெரிக்காவில் ஒரு இலட்சம் பேரில் 27.3 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேசில் 21.09 பேர் எனவும், இந்தியாவில் 1.8 பேர் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கிரண் ரிஜ்ஜு மேலும் கூறினார்.
அதே போல் கொலை சம்பவங்கள் தொடர்பான 2012 ஆம் ஆண்டு ஐ.நா. சர்வேயின் படி பிரேசில் 50108 பேருடன் முதலிடத்தையும், இந்தியா 43335 பேருடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating