ஆண் குழந்தை பிறந்ததால் மனைவியை ஒதுக்கி வைத்த கணவர்!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகிலுள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 35).மருந்துக் கடைக்காரர். இவருக்கும் தாராபுரத்தை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் சிவதர்சன் (3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மீண்டும் 2–வது முறையாக கவுசல்யா கர்ப்பம் தரித்தார்.
பிரசவத்துக்காக சின்னத் துரை தனது மனைவி கவுசல்யாவையும், மகன் சிவதர்சனையும் தாராபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றார். இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவலை கவுசல்யாவின் பெற்றோர் தங்களது மாப்பிள்ளை சின்னத்துரைக்கு தெரிவித்தனர். மீண்டும் ஆண் குழந்தை பிறந்த சந்தோஷ செய்தியை அனைவரும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
ஆனால் சின்னத்துரை மட்டும் சந்தோஷம் அடையவில்லை. தனக்கு பெண் குழந்தைதான் வேண்டும். ஆண் குழந்தை வேண்டாம். அந்த குழந்தையை பார்க்க வர மாட்டேன் என்று கூறிவிட்டார். கடந்த 1 மாதமாக தினமும் பலர் சின்னத்துரையிடம் சமாதானம் பேசினர். ஆனால் எதற்கும் அவர் ஒத்துவரவில்லை.
இதையடுத்து கவுசல்யாவின் சகோதரர் முத்து கிருஷ்ணன். சமாதானம் பேசுவதற்காக சின்னத்துரையை தாராபுரம் வரவழைத்தார். தாராபுரத்துக்கு சின்னத்துரை தனது உறவினர்களான அபிமன்யு மற்றும் சந்திரபோஸ் ஆகியோருடன் வந்தார். ஒரு பொது இடத்தில் முத்து தரப்பினர் சின்னத்துரை தரப்பினரிடம் சமாதானம் பேசினர். ஆண் குழந்தை பிறந்துள்ளது அதிர்ஷ்டம் ஆகும் பெண் குழந்தை வேண்டும் என்றால் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினர்.
ஆனால் சின்னத்துரை தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்ற ஆர்வத்தில் இருந்தேன். ஆனால் ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே எனக்கு மனைவி வேண்டாம். அவளை பிரித்து வைக்கிறேன் என்று கூறினார். இதனால் அங்கு திடீரென்று சலசலப்பு உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பின்னர் தனித்தனியாக இருவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கிருந்து தாராபுரம் போலீசார் இருதரப்பினரும் புகார் அளித்தனர். தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இருதரப்பினரிடமும் மனுவை பெற்று வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating