பிரபாகரன் மகனின் மரணத்தை, மறுவிசாரணை செய்யும் புலிப்பார்வை: இயக்குனர் பிரவீன்காந்தி!!
‘ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது,
ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் எடுத்திருக்கிறோம்.
பாலச்சந்திரன் சுட்டுக் கொல்வதற்குமுன் இலங்கை ராணுவத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சேனல் 4 நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த பாலகனுடைய பார்வை அனைவரையும் உலுக்கியது. அந்த பார்வையை பதிவு செய்யும்விதமாய் படத்திற்கு ‘புலிப்பார்வை’ என பெயர் வைத்துள்ளோம்.
இதை படமாக எடுப்பதற்கு முன், இந்த கதையை சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் சொல்லி இதற்கு அனுமதி வாங்கினேன். இப்படத்தில் பாலச்சந்திரன் கதாபாத்திரத்தில் சத்யா என்ற சிறுவன் நடித்திருக்கிறார். நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
படத்தின் படப்பிடிப்பு கேரளாவிலும், ஒரு சில காட்சிகளை இலங்கையிலும் படமாக்கியுள்ளனர். இந்த படம் இந்தியாவுக்கு விடுதலை புலிகள் எதிரிகள் இல்லை என்பதையும். தமிழர்களின் வீரத்தையும் பதிவு செய்திருக்கிறோம். படத்தில் சினிமாவுக்கு தேவையான அத்தனை விஷயங்களும் இருக்கிறது. படத்திற்கு சென்சார் முடிந்து, யுஏ சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர் என்றார்.
சிறுவன் சத்யா பேசும்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக எனது பள்ளிக்கு இயக்குனர் நேரில் வந்து என்னை தேர்வு செய்தார். என்னுடைய இன்னொரு சிறுவனையும் தேர்வு செய்து வைத்திருந்தார். அப்போது, பிரபாரகன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால் இந்த படத்தில் நாம் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தினேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. அந்த கதாபாத்திரத்தை நான் நன்றாக செய்திருப்பதாக உணர்கிறேன் என்றான்.
இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கியதோடு மட்டுமில்லாமல், பாடல்கள் எழுதி இசையமைக்கவும் செய்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். சாய் மகேஷ்வரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுகிறார்.
Average Rating