அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: கணவர் கைது!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 24). இவருக்கும் வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியை சேர்ந்த சங்கிலி மகன் கருப்பசாமி (34) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
கட்டிட தொழிலாளியான கருப்பசாமி, திருமணமான 10 நாளில் கூடுதல் வரதட்சணை கேட்டு பாண்டிச் செல்வியிடம் தகராறு செய்தாராம். மேலும் நகை–பணம் வாங்கி வருமாறு பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டாராம்.
அதன் பிறகு பெரியவர்கள் சமரசம் செய்து பாண்டிச் செல்வியை கணவர் வீட்டில் விட்டு சென்றனர். ஆனால் சில நாட்கள் மட்டும் அமைதியாக சென்ற குடும்ப வாழ்க்கையில் மீண்டும் சச்சரவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில், பாண்டிச்செல்வி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
கணவர் கருப்பசாமி, கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி சித்ரவதை செய்து வருகிறார். அதனை வாங்கி வராவிட்டால் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விடுவதாக மிரட்டுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருப்புக் கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
Average Rating