நாட்டறம்பள்ளியில் மாணவிகளிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்: பள்ளியை பொதுமக்கள் முற்றுகை!!
நாட்டறம்பள்ளியை அடுத்த எக்லாசுபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக கருணாகரன் (வயது 45) உள்ளார்.
இவர் அந்த பள்ளியில் படிக்கும் 4, 5–ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெற்றோர்கள், ஊராட்சி மன்ற தலைவர் தேவசோழன் ஆகியோர் எச்சரித்துள்ளனர். அதன்பிறகும் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் தலைமையாசிரியர் கருணாகரன் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வருவதாகவும், சாதி பெயரை சொல்லி மாணவ –மாணவிகளை திட்டுவதாகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சித்ரா, விஜயலட்சுமி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தலைமையாசிரியர் கருணாகரன் தலைமறைவாகிவிட்டார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் ரங்கநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதியளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating