ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்!!
சித்தூர் அருகே உள்ள பந்தாருபள்ளி ஏனாதி காலனியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சத்தியா. அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் பூபதி (வயது 25). இவர், தன்னை காதலிக்க வேண்டும் என சத்தியாவை கடந்த சில நாட்களாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஆனால், அவரின் காதலை சத்தியா ஏற்கவில்லை. எனினும், தொடர்ந்து தொந்தரவு செய்த வண்ணம் இருந்தார். இதுதொடர்பாக சத்தியா, தன்னுடைய பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். பூபதிக்கும், சத்தியாவுக்கும் அண்ணன், தங்கை உறவு முறையாக இருப்பதால், சத்தியாவின் பெற்றோர் பூபதியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்திமதி கூறி எச்சரித்தனர்.
இந்த நிலையில், சத்தியாவுக்கு அவரின் பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். இதனை தெரிந்து கொண்ட பூபதி, தனக்கு கிடைக்காத சத்தியா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பழிவாங்க நினைத்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சத்தியா தோட்டத்துக்கு சென்றிருந்தார். அப்போது தோட்டத்துக்கு சென்ற பூபதி, சத்தியாவை காதலிக்க வற்புறுத்தினார். அவர் உறவு முறையை கூறி வேண்டாம் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பூபதி சத்தியாவை ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் வராததால் ஆத்திரம் அடைந்த பூபதி, தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக மிரட்டினார்.
மிரட்டலுக்கு பயந்த சத்தியா உடனே கூச்சலிட்டு அலறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் பூபதி சத்தியாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். சத்தியாவின் இரு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. வலியால் அவர் கதறி துடித்தார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சத்தியாவின் பெற்றோர் ராமகுப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating