திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்!!
ஆந்திராவில் இந்த மாதம் பல முகூர்த்த நாட்கள் இருந்தாலும் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் சிறந்த முகூர்த்த நாட்களாக தெலுங்கு மக்களால் கருதப்படுகிறது.
அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதாலும், மாத சுத்த சதுர்த்தசி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் அதிர்ஷ்டகரமான முகூர்த்த நாளாக மக்கள் கருதுகிறார்கள்.
எனவே இன்றைய தினம் ஆந்திரா, தெலுங்கானாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடந்தது. மேலும் கிரகபிரவேசம், நிச்சயதார்த்தம், பூமி பூஜை போன்ற சுப காரியங்களையும் இன்று நடத்தினார்கள்.
திருப்பதியில் மட்டும் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடந்தது. மண்டபம், சத்திரம் கிடைக்காததால் வீதி மற்றும் திறந்த இடங்களில் தாங்கள் அழைத்து வந்த புரோகிதர் மூலம் மந்திரங்கள் கூறி வைதீக முறைப்படி சடங்குகள் நடத்தி ஜோடிகள் தாலி கட்டிக் கொண்டனர்.
ஏராளமான திருமணங்கள் நடந்ததால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.3.39 கோடி வசூலானது.
நேற்று இரவு வி.ஐ.பி. தரிசனத்தில் பிரபலங்கள் பலர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நடிகை ஸ்ரீதேவி, தனது 2–வது மகள் குஷிகபூர் மற்றும் உறவினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். உறவினர் திருமண விழாவில் பங்கேற்க திருப்பதி வந்த அவர் அப்படியே ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
இதேபோல் நடிகர் சுமன் தனது குடும்பத்தினருடன் கோவிலில் வழிபட்டார். நடிகர் கோட்டா சீனிவாசனும் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
வி.ஐ.பி.க்கள் வருகையால் உண்டியல் வருமானம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating