மாமியாரை லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற மருமகன் கைது!!
மாமியாரை லாரியை ஏற்றிகொல்ல முயன்ற மருமகனை போலீசார் இன்று கைது செய்தனர். கைதானவரின் பெயர் செல்வராஜ் (வயது 36). நாமக்கல் மாவட்டம் நல்லம் பாளையத்தை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகன் ஆவார்.
இவருக்கும் மோகனூரை அடுத்த அரசநத்தம் அருகே உள்ள மல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் (50), தனலட்சுமி ( 45) ஆகியோரின் மகள் சங்கீதாவுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன் –மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சங்கீதா கணவரை பிரிந்து சென்று கோர்ட்டில் விவாகரத்து பெற்றார். அவருக்கு கணவர் மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
கடன் வாங்கி லாரியை ஓட்டி வந்த செல்வராஜால் கடனையும் அடைக்க முடியவில்லை. ஜீவனாம்சமும் கொடுக்க முடியவில்லை.
இதுபற்றி அவரது மாமியார் தனலட்சுமி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கடந்த மாதம் 14–ந் தேதி பால் ஊற்றி விட்டு சென்ற மாமியார் தனலட்சுமி மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீது லாரியை ஏற்றியது மருமகன் செல்வராஜ் என்பது தெரிய வந்தது. மேலும் லாரியை ஏற்றி அவரை கொல்ல அவர் திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து செல்வராஜை இன்று காலை மோகனூர் போலீசார் கைது செய்தனர்.
Average Rating