திருமணத்தையும் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு!!
பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது திருமணப் பதிவையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. முதலில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால் இறுதியாக பதிவாளரை நேரில் சந்திக்கும் அனுமதியை பெற்று ஒரு தம்பதியர் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள இயலும்.
வடக்கு மாவட்டங்களில் அடுத்த மாத மத்தியில் துவங்கப்படும் இந்த நடைமுறையின் பரீட்சார்த்த செயல்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற்காலத்தில் டிஜிட்டல் சான்றிதழை வழங்கவும் மத்திய அரசு எண்ணியுள்ளது. மாவட்ட அலுவலகங்களில் தேவையில்லாத தாமதத்தையும், இடைத் தரகர்களின் கும்பலையும் குறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் வீடுகளில் இணையதள இணைப்பு வசதி இல்லாதவர்களுக்கு மாவட்ட அலுவலகங்களில் இந்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று டெல்லி பிரதேச ஆணையாளர் தரம்பால் தெரிவித்தார். இதுமட்டுமின்றி வருவாய்த்துறையின் பிற சேவைகளான பிறப்பு, இறப்பு, இனம், தேசிய சான்றிதழ் பெறுதல், உறைவிடம், மாற்றுத் திறனாளிகள், வருமான சான்றிதழ் போன்ற அனைத்து பல சேவைகளையும் இணையதளத்தில் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
உணவுத்துறை மூலம் ரேஷன் கார்டு வழங்குதல், சமூக நலத்துறை மூலம் ஓய்வூதியம், ஊனமுற்ற நபர்கள் மற்றும் விதவைகள் உதவித்தொகை போன்றவற்றிற்கான நடைமுறைகளும் இணைய தளப் பயன்பாட்டில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நபருக்கு அளிக்கப்படும் UID ஆதார் எண்ணே அனைத்து விண்ணப்பங்களுக்கும் அடிப்படை எண்ணாகப் பயன்படுத்தப்படும் என்றும் இந்த தரவுத் தகவல்களே பிற அலுவலகங்களுக்கும் உபயோகிக்கப்படும் என்றும் அரசு அறிக்கை குறிப்பிடுகின்றது.
Average Rating