பாரிமுனையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்திக்கொலை!!
பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் நடைபாதையில் வசித்து வந்தவர் தாஸ் (28). திருமணமாகாத இவர் தனது தாயுடன் நீண்ட காலமாக இங்கு வசித்து வந்தார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தார். 4 நாட்களுக்கு முன்புதான் விடுதலை ஆனார்.
நேற்று இரவு 10.30 மணி அளவில் தாஸ், எதிரில் உள்ள தம்புசெட்டி தெருவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது இடது காதின் பின்புறம் தலையில் இரும்பு கம்பியால் குத்தியது போன்று பெரிய காயம் இருந்தது. அவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஐகோர்ட்டு உதவி கமிஷனர் நசீர் பாஷா, எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாஸ் கொலையுண்டது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நடைபாதையில் வசித்துவரும் பெண் ஒருவருடன் தாஸ் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை பலமுறை அவரது கணவர் சதீஷ் தட்டிக் கேட்டுள்ளார். நேற்று இரவு தம்பு செட்டி தெருவில் தாசுடன், சதீசின் மனைவி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வந்த அவர், தாசிடம் தகராறு செய்துள்ளார். 2 பேரும் மோதிக் கொண்டுள்ளனர். இதில், சதீஷ், இரும்புகம்பியால் தாசை குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சதீசை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating