மலக்கட்டு நோயால் அவதிப்படும் குழித்துறை கோவில் யானையின் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு!!
குமரி மாவட்ட தேவசம் போர்டுக்கு சொந்தமான கோபாலன் யானை குழித்துறை மகாதேவர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த டிசம்பர் மாதம், மதம் பிடிப்பதற்கான அறிகுறி தென்பட்டதால், புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை.
இந்தநிலையில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு, காய்ச்சல் மற்றும் மலக்கட்டு நோயால் யானை பாதிக்கப்பட்டது. இதனால், கழிவுகள் வெளியேற வில்லை. உணவு, தண்ணீர் அருந்தாமல் சோர்வடைந்து வந்தது. இதைத்தொடர்ந்து, கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், செயற்கை முறையில் மலத்தை வெளியேற்றி வந்தனர்.
இந்தநிலையில், மலம் கட்டு நோயால் அவதிப்பட்டு வந்த யானையை நேற்று தேவசம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:
கோபாலன் யானை கடந்த ஒரு வாரகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உணவை உட்கொள்ள தொடங்கியுள்ளது. யானைக்கு, அன்னாசி பழம், வெள்ளரிக்காய் போன்ற எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கால்நடை டாக்டர்கள் தினமும் பார்வையிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 100 பாட்டில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டுள்ளது. யானையின் மருத்துவ செலவிற்காக ரூ. 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating