சல்மானுக்கு மட்டும் சலுகை அளிக்குமா சட்டம்?
நடிகர் சல்மான் கான், மான் வேட்டையாடிய வழக்கில் 5 வருட தண்டனை விதிக்கப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான். கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ‘ஹம் சாத் சாத் ஹெய்ன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது 2 மான்களை வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு ராஜஸ்தான் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், சல்மான் கானுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சல்மான்கான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வந்தார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கும்படி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சல்மான் கான் மனு தாக்கல் செய்தார். ‘அரசுக்கு அதிகபட்ச வரி செலுத்தும் நபர்களில் நானும் ஒருவன். எனது தொழிலை (நடிப்பு) தொடர்ந்து செய்ய எனக்கு அடிப்படை உரிமை உள்ளது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. எனவே கீழ் கோர்ட் விதித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் சல்மான்கான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அக்டோபர் 28ம் திகதி வெளியாக உள்ளது.
Average Rating