7 மாணவர்களை வல்லுறவு செய்த பி.சபை உறுப்பினர் தலைமறைவு வெளிநாடு செல்லத் தடை!!
பாடசாலை மாணவர்கள் 7 பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வனாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.சுல்தான் மரிக்கார் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாதென புத்தளம் பதில் நீதவான் பசால் அபுதாகிர் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வனாத்தவில்லு பொலிஸார் நீதிமன்றிற்கு பீ அறிக்கை ஒன்றை சமர்பித்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் வௌிநாட்டிற்குத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர்.
வனாத்தவில்லு – கரத்தீவு பகுதி முஸ்லிம் பாடசாலை ஒன்றின் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் கடந்த 2ஆம் திகதி கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.
மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்குச் சென்ற இந்த சுற்றுலாவில் 53 மாணவர்கள், 35 மாணவிகள், 5 ஆசிரியர்கள், 6 ஆசிரியைகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூவர் அடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சார்பில் சென்றுள்ளார்.
வெலிகம – கப்பல்துறை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் 2ஆம் திகதி இரவு மாணவர்கள் தங்கியுள்ளனர். அதன்போது இரவில் 7 மாணவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த ஒருவர் புத்தளம் வலய பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார். பின்னர் வனாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிரதேச சபை உறுப்பினர் குற்றம் புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை கைது செய்ய வனாத்தவில்லு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் வனாத்தவில்லு பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் வெலிகம பகுதியில் இடம்பெற்றதால் விசாரணை தொடர்பான அனைத்து தகவல்களும் வெலிகம பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating