கள்ளக்காதலில் பிறந்ததால் 2 மாத ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச்சென்ற தாய்!!
வத்தலக்குண்டு அருகில் உள்ள ராமநாயக்கன் பட்டியில் ராமர்கோவில் உள்ளது. அந்த கோவிலில் தாழ்பாள்மட்டும் போடப்பட்டிருக்கும். பூட்டு போடுவது கிடையாது. இப்பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கோவில் வளாகத்தில் தூங்கி செல்வதுண்டு.
இன்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. எதிரில் டீக்கடை வைத்துள்ள கடைக்காரர் குழந்தையின் சத்தத்தை கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது 2 மாத ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பால்கண்ணனிடம் அவர் தகவல் தெரிவித்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் அவர்கள் விசாரித்தனர். மேலும் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் இந்த குழந்தையின் தாய் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த அமுதா (வயது40) என தெரிய வந்தது.
இவர் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது வீடுகளுக்கு சென்று ஊசி போடும் வேலை பார்த்து வருகிறார். இவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து ராமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வருகிறார்.
அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதில் 2½ வயது குழந்தை முதலாவதாக பிறந்தது. தற்போது மீண்டும் ஆண் குழந்தை பிறந்ததால் அக்கம் பக்கத்தினர் தன்னை கேவலமாக பேசுவார்கள் என்று பயந்து குழந்தையை கோவிலில் விட்டு சென்றது தெரிய வந்தது.
தனியாக வசித்து வந்தாலும் அமுதா ரேசன் கார்டில் தனது கணவர் சிவக்குமார் என்று வாங்கி வைத்துள்ளார்.
சிவக்குமாருக்கு திருமணம் ஆகி அவருக்கும் ஒரு பெண் குழந்தை இருப்பதால் அமுதாவுடன் சேர்ந்து வாழ மறுத்து வந்துள்ளார்.
தற்போது கோவிலில் வீசப்பட்ட ஆண் குழந்தை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அமுதாவை தேடி போலீசார் ஆண்டிப்பட்டிக்கு சென்ற போது அவர் தன்னை சிவக்குமாரின் உறவினர்கள் பார்த்தால் அடித்து கொன்று விடுவார்கள் என்று பயந்து தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
வத்தலக்குண்டு போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating