காதல் மனைவியுடன் தகராறு: விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்துரையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் அங்குள்ள கெங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி திருப்பூர் மாவட்டம் அவினாசி நாடார் காலனியை சேர்ந்த அமுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இனிய இல்லறத்தின் சாட்சியாக இவர்களுக்கு மலர்விழி (17) என்ற மகளும், தினேஷ்குமார் (16) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்–மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு மூண்டது. அமுதா தனது கணவர் சுப்பிரமணியத்தை அவினாசி போலீஸ் நிலையத்துக்கு மாறுதல் பெற்றுவரும்படி கூறிவிட்டு அவினாசிக்கு வந்து விட்டார்.
மனைவியை பார்க்க சுப்பிரமணி அவினாசி புறப்பட்டு வந்தார். நாடார் காலனி அருகே வந்தபோது அவர் திடீரென ரோட்டில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் போலீஸ் ஏட்டு விஷம் அருந்தியதை கண்டு பிடித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி போலீஸ் ஏட்டு சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
எந்த போலீஸ் நிலையத்துக்கு மாறுதலாகி வர நினைத்தாரோ அதே போலீஸ் நிலையத்தில் அவரின் தற்கொலை வழக்குப்பதிவாகி விசாரணை நடைபெறுகிறது.
Average Rating