நாமக்கல்லில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை!!
நாமக்கல் மாவட்டம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முருகன் மகள் சவுந்தர்யா (வயது 18) பி.இ. சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். வகுப்பறையில் இருந்த அவர் சுமார் 10.30 மணியளவில் விடுதிக்கு சென்று விட்டு வருவதாக சக மாணவிகளிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடன் படிக்கும் சக மாணவிகள் கல்லூரி விடுதிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு மாணவி சவுந்தர்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த சக மாணவிகள் சவுந்தர்யாவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இது பற்றி கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவி சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நாமக்கல் ஆர்.டி.ஓ. காளிமுத்து ஆகியோர் கல்லூரிக்கு விரைந்து சென்று அவருடன் படிக்கும் மாணவிகளிடமும், அவருடன் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் கல்லூரி வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடமும், விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ன காரணம்? என்பன போன்ற விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொண்ட மாணவி சவுந்தர்யாவின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியாகும்.
Average Rating