திருமணத்தால் அதிக கடன் ஏற்படும்: தந்தைக்கு பாரம் என்று நினைத்து பட்டதாரி பெண் தற்கொலை!!
ஆனைமலை கோழிப்பண்ணை என்ற இடத்தை சேர்ந்தவர் தண்டபாணி. குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கல்பனாதேவி (வயது 21). பட்டதாரி. தண்டபாணி சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக பலரிடம் கடன் வாங்கினார்.
இந்நிலையில் கல்பானதேவிக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகள் நடந்தது. தந்தை தனது படிப்புக்கும், புதிய வீடு கட்டுவதற்கும் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். அதிக கடனும் வாங்கி அவதிப்படுகிறார்.
தனக்கு திருமணம் செய்து வைத்தால் இன்னும் அதிகமாக கடன் வாங்க வேண்டி வரும். இதனால் தந்தை மிகுந்த சிரமப்படுவார் என்று அடிக்கடி குடும்பத்தாரிடம் கூறி புலம்பி வந்தார். கல்பனா தேவிக்கு குடும்பத்தார் சமாதானம் சொல்லி வந்தனர். இருந்தாலும் கல்பனாதேவி தயக்கம் மற்றும் விரக்தியிலேயே காணப்பட்டார். நேற்று தண்டபாணி மற்றும் குடும்பத்தினர் அருகில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்கு சென்றனர். வீட்டில் கல்பனாதேவி மட்டும் தனியாக இருந்தார். தன்னால் தந்தைக்கு சிரமம் வேண்டாம் என்று நினைத்த கல்பனாதேவி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தோட்ட வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய தண்டபாணி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மகளின் திருமணம் செலவு என்பது தந்தைக்கு கடமை, சுகமான சுமைதானே? ஏன் பாரம் என்று நினைத்தாய் ? என்று மகளின் பிணத்தை பார்த்து தந்தை கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கல்பனாதேவியின் உடலை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating