சிறையில் ஜெயாவை சந்திக்க முடியாது திரும்பினார் சரத்குமார்!!
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. காரில் சென்றார். அவருடன் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கட்சி பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும் ஜெயபிரகாசும் சென்றனர்.
அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து பேச நீண்ட நேரமாக பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு காத்து இருந்தனர். ஆனால் ஜெயலலிதாவை சந்தித்து பேச சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் வெளியே வந்த சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்களுக்கு சிறந்த சேவையை ஜெயலலிதா ஆற்றி வந்திருக்கிறார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால், தமிழகமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர்.
டான்சி வழக்கில் எப்படி ஜெயலலிதா விடுதலை ஆனாரோ அதுபோல இந்த வழக்கில் இருந்தும் விடுதலையாகி வெளியே வருவார். 2016-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார். தடைகளை உடைத்தெரிந்து, மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பார்.
சமத்துவ மக்கள் கட்சி எப்போதும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருக்கும். இந்த வழக்கின் தீர்ப்பு, இறுதியானது என்று சொல்ல முடியாது. இன்னும் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு இருக்கிறது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.” இவ்வாறு சரத்குமார் கூறினார்.
Average Rating