குளிருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு பஸ்சுக்குள் ஓய்வெடுத்த கரடி!!
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் – வன விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களை புதருக்குள் மறைந்திருக்கும் காட்டு யானைகள் தும்பிக்கையால் சுற்றி வளைத்து காலில் போட்டு மிதித்துக் கொல்வது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதே போல் சிறுத்தைப்புலிகளும் குடியிருப்புக்குள் புகுந்து தங்கள் கோரப்பசிக்கு மனிதர்களை இரையாக்கிக் கொள்கின்றன.
இந்த நிலையில் குளிருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கரடி ஒன்று அரசு பஸ்சுக்குள் ஓய்வெடுத்த சம்பவம் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே தூதூர்மட்டம், கெரடாலீஸ், கிரேக்மோர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கிராமங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் உள்ளன.
வனப்பகுதிகளில் வசிக்கும் கரடிகள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.
தூதூர்மட்டம் பகுதியில் இரவு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அப்போது உணவு தேடி வந்த கரடி ஒன்று குளிர் தாங்க முடியாமல் தூதூர்மட்டம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு அரசு பஸ்சில் ஏறி படுத்துக்கொண்டது. பின்னர் அப்படியே அசந்து தூங்கியது.
இந்த நிலையில் அதிகாலை 5.15 மணிக்கு வழக்கம் போல் பஸ் டிரைவர் அந்த பஸ்சை இயக்கினார். அப்போது பஸ்சின் என்ஜின் சத்தம் கேட்டு பஸ்சில் உறங்கி கொண்டு இருந்த கரடி எழுந்து அருகில் இருந்த பயணிகள் நிழற்குடைக்குள் பாய்ந்து பதுங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினார்கள். துணிச்சலான சில வாலிபர்கள் போராடி அந்த கரடியை அங்கிருந்து விரட்டினார்கள். பின்னர் அந்த கரடி அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றது.
பஸ்சுக்குள் படுத்து துங்கிய கரடி மனித உயிருக்கு உலை வைக்கும் முன்பு அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating